ஐ.தே.க. முன்னாள் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதிவலவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் வைத்து இன்று (13) மாலை 7.00 மணியளவில் மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில், பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்றை தனது வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்காததால், பொலிஸாருடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (09) இரவு, ரஞ்சன் ராமநாயக்கவும் பொலிஸாரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவொன்றை நேரடியாக வெளியிட்டிருந்தார். இதன்போது அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட லொறியொன்றை மாதிவலவிலுள்ள அவரது வீட்டு வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
எவ்விதமான செல்லுபடியற்ற ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணம் செய்த விளையாட்டு அமைச்சரின் கீழ் பணி புரிவதாக தெரிவிக்கப்படும் ஒருவரை விசாரித்துக் கொண்டிருந்தபோது, ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேரவப்பெருமவினாலும் நேற்றையதினம் (12) சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அவரது நிவாரணப் பணிகளை நிறுத்த பொலிசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn