ஈரானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி செய்வதில் எந்த ஆட்சேபமும் இல்லை

ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து கூட்டாக தெரிவிப்பு

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஈரானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி செய்வதில் எந்த ஆட்சேபமும் இல்லை என ஜெர்மனி தெரிவித்துள்ளது.

ஈரானில் 84 ஆயிரத்து 802 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் இதுவரை 5 ஆயிரத்து 297 பேர் பலியாகியுள்ளனர்.

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள ஈரான் கொரோனாவை எதிர்த்து போரிடும் அளவுக்கு போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

இதனால் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க 5 பில்லியன் டொலர்கள் நிதியை அவசரகால கடனாக தரும்படி ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்திடம் இம்மாத தொடக்கத்திலேயே ஈரான் அரசு கோரிக்கை விடுத்தது.

ஈரான் விடுத்த கோரிக்கைக்கு தற்போது வரை ஐஎம்எப் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அரசு என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

வொஷிங்டன்னை தலைமையகமாக செயல்பட்டு வரும் ஐஎம்எப் அமைப்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அணு ஆயுத சோதனை விவகாரத்தில் ஈரான் மிகுந்த கோபத்தில் உள்ள அமெரிக்கா கொரோனாவுக்கு அந்நாட்டு கேட்ட நிதியை சர்வதேச நிதியம் வழங்க அனுமதிக்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகளும் ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஈரானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூகோ மாஸ் தெரிவித்துள்ளார்

இந்த விவகாரத்தில் ஜெர்மனை போலவே பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை.  ஆனால், ஈரானுக்கு வழங்கப்படும் நிதி உதவி கொரோனாவை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை சர்வதேச நிதியம் உறுதி செய்யவேண்டும் என மாஸ் தெரிவித்துளார்.

Thu, 04/23/2020 - 12:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை