சுய பொருளாதாரத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

வீட்டுத் தோட்டங்கள் மேற்கொள்வதற்கு மக்களுக்கு இலவசமாக பயிர் விதைகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன். இக்காலகட்டத்தில் சுய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது அதற்கு நாங்களும் உறுதுணையாக செயற்பட இருக்கின்றோம்   என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பில்  தனது  கட்சி ஆதரவாளர்களுடன்  சந்திப்பில்  ஈடுபட்ட பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள புதன்கிழமை(22)  ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்,

கொரோனா வைரஸ் அதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்தாலும் இன்று அனைவரும் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி வாழும் சூழ்நிலையை இந்த வைரஸ் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த வைரஸ் பரவல்  இருந்தாலும்  ஒருபக்கம் சந்தோஷமாக இருக்கின்றது. இக் காலகட்டத்தில் சுய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது அதற்கு நாங்களும் உறுதுணையாக செயற்பட இருக்கின்றோம்.

வீட்டுத் தோட்டங்களில் மேற்கொள்வதற்கு மக்களுக்கு இலவசமாக பயிர் விதைகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன். இக் காலகட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் சுயதொழில் வீட்டுத் தோட்ட பயிர்கள் வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உண்மையில் அவர்களை பாராட்ட வேண்டும். விவசாயிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான கடன் வசதிகளை வழங்குவதற்கான நடைமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது இதுவும் ஒரு சிறந்த திட்டமாக பார்க்கின்றோம்.

எமது மக்கள் சுயதொழில் மூலம் முன்னேற்றம் காண வேண்டும் எதற்கெடுத்தாலும் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு செல்லக்கடாது.

பிறரிடம் கையேந்தும் தேவையற்ற செயற்பாடுகள் மூலம் எமது சமூகத்தை கேவலப்படுத்துகின்றனர்.   இன்று பல அரச சார்பற்ற நிறுவனங்கள், சிலவெளிநாட்டு அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை குறிப்பிட்ட அளவு பொதிகளை வழங்கி விட்டு மீதிப் பணத்தை கையாடல் செய்து வாழும் கேவலமான நிலையில் இருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலைகளில் நமது மக்கள் சுயமாக தைரியமாக நின்று செயற்படுவதற்கு அனைத்து மக்களும் தயாராக வேண்டும்.

குறிப்பாக எமது வடக்கு, கிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பல துன்பங்களைச் சுமந்து வாழ்ந்தவர்கள். அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் எமது மக்கள் ஒருவரிடமும் கையேந்தவில்லை. அண்மைக்காலமாக இந்த நிலைகள் மாற்றமடைந்து வருகின்றது. இந்த நிலையை நாங்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்த காலங்களில் எந்த சூழ்நிலையை பயன்படுத்தினோமோ அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

வன்னியிலே யுத்தம்  நடைபெறும் போது மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை, இருந்தாலும் அங்குள்ள மக்கள் சுயமாக வாழ்க்கைகளை நடத்தியிருந்தார்கள். கௌரவமாக வாழ்ந்தார்கள். எதற்காகவும் கவலைப்பட்டதில்லை. கையேந்தியதுமில்லை. பட்டினியால் மடிந்தவர்கள் கூட இல்லை. அவ்வாறான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு வந்த ஒரு சமூகம் என்பதை அனைத்து மக்களும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

எனக்கு பல இளைஞர் யுவதிகள் தொலைபேசி அழைப்புகள் மூலம் வெளிமாவட்டத்திலிருக்கும் தங்களை தங்கள் சொந்த இடங்களுக்கு கூட்டிச் செல்லுமாறு தெரிவிக்கின்றனர். அவர்கள் நாளாந்த கூலி வேலைக்காக சென்றவர்கள். அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். என்பது இந்த ஊடக சந்திப்பில் ஊடாக அரசாங்கத்திடம் வேண்டிக் கொள்கின்றேன்.

அவர்களைப் பரிசோதிப்பது என்றால் அண்மையிலுள்ள புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து வீடுகளுக்கு அனுப்பிவையுங்கள். அவர்களை கொழும்பு மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறுவது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். ஏனென்றால் நேற்று பாகிஸ்தானில் இருந்த இலங்கை மாணவர்களை கூட விமானம் மூலம் அழைத்து வந்திருந்தார்கள். 

எமது நாட்டுக்குள் இருப்பவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதில் என்ன சிரமம் இருக்கின்றது. இந்த விடயம் அரசுக்கு தெரியவில்லையா? அல்லது இதனை பாராமுகமாக பார்த்துக்கொெண்டிருக்கிறார்கள்  என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனை அரசு கவனத்தில் கொண்டுவர வேண்டும் என்பதே இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.

Fri, 04/24/2020 - 14:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை