கப்பலில் பணியாற்றிய இலங்கையர் மரணம்

கடற்படை உதவியுடன் சடலம் இலங்கைக்கு

வணிகக் கப்பலொன்றில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர் ஒருவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். 

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட MV Grace எனும் வணிகக் கப்பலில் பணியாற்றி வந்த டி.ஜே.சி. குமாரசிங்க எனும் சமையற்கலை நிபுணரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த கப்பலானது வெளிநாடொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று குறித்த சமையற்கலை நிபுணர் நேற்று (22) உயிரிழந்துள்ளார்.  இவ்வாறு உயிரிழந்தவரது  சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர கடற்படையினர் உதவியுள்ளனர்.

இவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர கப்பலின் உள்நாட்டு முகவரான Marine International (pvt) Ltd நிறுவனம் உதவி கோரியிருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கப்பலின் உள்ளூர் முகவரின் கோரிக்கைக்கு அமைய, கொழும்புத் துறைமுகத்தை MV Grace கப்பல் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, மேல் மாகாண கட்டளைப் பிரிவுடன் இணைக்கப்பட்ட கடற்படையின் இரசாயன,  உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear-CBRN) பிரிவு,  குறித்த சடலத்திற்கு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தொற்றுநீக்கம் செய்ததோடு, குறித்த கப்பலின் உள்ளூர் முகவரிடம் சடலத்தை ஒப்படைத்தனர். 

Thu, 04/23/2020 - 11:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை