வீடொன்றில் போதைப்பொருள் பொதி செய்து கொண்டிருந்தபோது, கைதான 03 சந்தேகநபர்களிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளுமாறு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, நேற்றுமுன்தினம் (11) ஹெரோயின் போதைப்பொருள் பொதி செய்யப்படுவதாக கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து நிந்தவூரில் கடற்கரைப்பகுதி வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டது.
இதன்போது குறித்த வீட்டினுள்ளே ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த 03 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்தனர்.
கைதான மூவரிடம் இருந்து 58 கிராம் 80 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்காக நேற்று (12) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் உத்தரவைப் பெற்று விசாரணை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அத்துடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பாறுக் ஷிஹான்)
from tkn