ஊரடங்கை தளர்த்தினாலும் மக்கள் இருப்பது போன்று நடக்க வேண்டும்

இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றவும் கல்முனை சுகாதார பணிப்பாளர்  சுகுணன் தெரிவிப்பு  

அம்பாறை மாவட்டத்தில்  ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது போன்று இறுக்கமான நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர அலுவலகம் ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (19.04.2020) நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போதே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பானர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது,

ஒலுவில் துறைமுகப் பகுதியில் கடற்படையினரின் கண்காணிப்பில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு ஜாஎல பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களில் 23 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது, 03 பேருக்கு COVID -19 தொற்று இருப்பது (18.04.2020) கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மூன்று பேரும் இரணவில பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

அக்கறைப்பற்றில் COVID -19  தொற்றுக்குள்ளான இரண்டு நபர்களுடன் நேரடி தொடர்பு வைத்த 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதி முடக்கப்பட்டுள்ளது.  அந்தப்பகுதியில் ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் பொதுச் சுகாதார பழக்கவழக்கங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் வரவேண்டும்.

கொரோனா தொற்று இல்லாத காலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கியுள்ளோம். ஆனால் தற்போது பொதுமக்கள் பீதிக்குள்ளாகியிருக்கிறார்கள். வைத்தியசாலைக்கு வருவதற்கு பயப்படைகிறார்கள். உண்மையில் அவ்வாறில்லை. 24 மணி நேரமும் உங்களுக்காக வைத்தியசாலைகள் திறந்திருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் வைத்தியசாலைகளை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். கிளினிக் வருபவர்களுக்குரிய மருந்து மற்றும் மாத்திரைகளை வீடுகளுக்கே கொண்டு கொடுப்பதற்கான பணிகளையும் முன்னெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்) 

Mon, 04/20/2020 - 07:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை