அம்பாறையில் 6,000 வீட்டுத்தோட்ட விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம்

தற்போது அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் விவசாயிகள் தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதி ஏற்கனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய 6,000 வீட்டுத்தோட்ட விசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.அபுல் கலீஸ் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

வீட்டுத் தோட்ட பயிர் செய்கைக்கான விதைகள் கமநல சேவைகள் மத்திய நிலையத்தினூடாக ஒர், இரு தினங்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் இந்த வேலைத்திட்டங்கள் மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் மொத்த அரிசி உற்பத்தியில் 25 வீதத்தை நான்கில் ஒரு பகுதியை அம்பாறை மாவட்ட உற்பத்தி பூர்த்தி செய்கிறது. இம்முறை சிறு போகத்தில் 68ஆயிரம் ஹெக்டரில் நெற்பயிர் செய்கையை காலம்முந்தி ஆரம்பித்திருக்கிறோம். ஏனெனில் மீண்டும் பெரும் போகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் எங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இடைவெளி கிடைக்கும். இந்த இடைவெளி காலப்பகுதியில் பயறு, கௌபி, சோளம் போன்ற பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் என்றார்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Sat, 04/11/2020 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை