அக்கரைப்பற்றில் 4482 குடும்பங்களுக்கு ரூ. 2 கோடியே 24 இலட்சம் மானியம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையையடுத்து அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள 4482 குடும்பங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபாய் வீதம் 02 கோடியே 24 இலட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் தெரிவித்தார்.

தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பதிலாளர்கள், வருமானத்தை இழந்துள்ள சிறு கைத்தொழிலாளர்கள், தொழிலை இழந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அன்றாட தொழிலை இழந்துள்ள குடும்பங்கள் என பலர் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 28 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் இதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும், கூறினார்.

கிராம மட்டக் குழுக்கள் ஊடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரால் இதற்கான தகவல் திரட்டப்பட்டதாகவும், இதனடிப்படையிலேயே இப் பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும், குறிப்பிட்டார்.

அத்தோடு, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 04 ஆயிரத்தி 307 சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபாய் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பெறுவதற்கு தகுதியான காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2980 குடும்பங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.

ஒலுவில் விசேட நிருபர்

Wed, 04/22/2020 - 10:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை