இலங்கையில் தங்கியுள்ள மலேசிய நாட்டவர் 81 பேர் இன்றைய தினம் (14) நாடு திரும்பியுள்ளனர்.
அதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டது.
மலேசியாவுக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலமே அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி. சந்திரசிறி தெரிவித்தார்.
அதேவேளை நாடு திரும்ப முடியாமல் இலண்டனில் விமானநிலையத்தில் நிர்க்கதியாகி இருந்த இருவர் நேற்று (13) நாட்டை வந்தடைந்தனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL540 விமானத்தில் அவர்கள் கட்டுநாயக்கவை நேற்று மதியம் வந்தடைந்ததாக அவர் தெரிவித்தார்.
அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதற்கிணங்க வெளிநாடுகளில் உள்ள விமான நிலையங்களில் நிர்க்கதிக்கு உள்ளாகி இருந்த இலங்கையர்கள் 21 பேர் இதுவரை நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை வெளிநாட்டில் தங்கியுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் தெரிவிக்கையில், குறித்த நாடுகளின் தூதுவர்களோடு அது தொடர்பில் தொடர்புகளை மேற்கொண்டு உரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார் .(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn