தம்பதிவ சென்ற பெண்ணின் வீட்டிற்கு முன்னால், அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்கள்
நேற்றைய தினம் (18) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 10 பேரில் ஆறு பேர் கொழும்பு, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியைச் சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் கடந்த 15ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டார். அவர் கடந்த பெப்ரவரி 29 ஆம் திகதி தனது, கணவர் மற்றும் மூத்த புதல்வருடன் தம்பதிவ யாத்திரைக்கு நுகேகொடையிலுள்ள முகவர் ஒன்றின் மூலம் பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த அவர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகவீனமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது அன்றைய தினமே(15) அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.
இவருடன் குறித்த யாத்திரையில் பங்குபற்றிய அவரது கணவர் மற்றம் மூத்த புதல்வர் மற்றும் வீட்டிலிருந்த இளைய புதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த பெண் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீடு அமைந்துள்ள, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியிலுள்ள 58 வீடுகள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அப்பகுதியைச் சேர்ந்த பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (18) கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்ட 10 பேரில் 06 பேர், தம்பதிவ யாத்திரை சென்று திரும்பிய குறித்த பெண்ணின் வீட்டிற்கு முன்னால் வசிக்கும் வீட்டில் உள்ள 02 பேர், அவ் வீட்டுக்கு அடுத்துள்ள வீட்டை சேர்ந்த 2 பேர், அவ்வீட்டுக்கு அண்மையிலுள்ள இரு மாடிகளைக் கொண்ட வீட்டிலுள்ள இரு குடும்பங்களைச் சேர்ந்த 02 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் ஆரம்பித்ததன் பின்னர் இவ்வாறு ஒரே பிரதேசத்தில் அதிகளவில் வைரஸ் தொற்றை கொண்ட குழுவினர் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று அடையாளம் காணப்பட்ட 03 பேர், ஜா-எல, சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றிய நபர்களுடன் தொடர்பில் இந்த நிலையில் ஒலுவிலில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
மற்றையவர் கேகாலை, துல்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவருக்கு கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள தூய்மைப்படுத்தல் சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பி ஒருவர் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிய எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய தற்போது கொரோனா வைரஸ் தொற்றிய 254 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 156 பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
from tkn