ஊரடங்கு: இடர் வலயங்களில் தொடரும்; ஏனைய இடங்களில் ஏப். 06 வரை

ஊரடங்கு: இடர் வலயங்களில் தொடரும்; ஏனைய இடங்களில் ஏப். 06 வரை-Curfew Will Continue Until Apr 06

- அத்தியாவசிய சேவைகளுக்கான நடைமுறையை துஷ்பிரயோகம் செய்வோர் மீது நடவடிக்கை
- கண்டி மற்றும் களுத்துறை பிரதேச தனிமைப்படுத்தல் தொடரும்

கொரோனா தொற்று பரவலின் அடிப்படையில், இடர் வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இன்று (01) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும்.
தொடர்ந்து ஏப்ரல் 06, திங்கள் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிககு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Wed, 04/01/2020 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை