இ​ரு பிள்ளைகளை வெட்டிக் கொன்ற தந்தை தானும் தற்கொலை

கொக்கரெல்லயில் சம்பவம்

இரண்டு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தனது உயிரையும் தந்தை மாய்த்துக் கொண்ட கோரச் சம்பவம் கொக்கரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நிகினி செஹென்ஷா (03-வயது) மற்றும் தனுஜ ஒஷான் (06-மகன்) ஆகிய இருவரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த பின்னர் சமன் குமார விக்கிரமசிங்க என்ற 32-வயதுத் தந்தையும் தனது, உயிரை மாய்த்துக் கொண்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் கடந்த 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையளவில் இடம்பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே,இவரின் மனைவி (பிள்ளைகளின் தாய் ) வெளிநாடு செல்வாதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பாட்டி ஒருவரின் கண்காணிப்பிலேயே பிள்ளைகள் இருந்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்று இரவே பாட்டி வீடு திரும்பியுள்ளார்.

தந்தையுடன் பிள்ளைகள் தனியாக இருந்த சந்தர்ப்பத்திலே தனது பிள்ளைகளை இவர் கொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளார்.

இவர் தேங்காய் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் கழுத்துக்களை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

அதற்காக அவர் தேங்காய் உரிக்கும் கத்தியை பயன்படுத்தியிருப்பதாக பொலிஸ் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பின்னர் வீட்டுக்குள்ளேயே தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென தெரிவிக்கும் பொலிஸார் வீட்டுக்குள்ளிருந்து அடிக்கடி சண்டை சத்தம் கேட்குமென அயலவர்கள் கூறுவதாகவும் குறிப்பிட்டனர்.

 லக்ஷ்மி பரசுராமன்

 

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை