பொதுசன மாதாந்த கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன

ஏப்ரல் மாதத்திற்கான பொதுசன மாதாந்த கொடுப்பனவுகள் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் என். மதிவண்ணன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் வங்கி கணக்குகளுக்கும் நேற்று (30) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பொதுசன மாதாந்திர உதவி கொடுப்பனவாக 72536 குடும்பங்களுக்கு  20.1 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை மாவட்டத்தில் 14216 குடும்பங்களுக்கு 4 மில்லியன் ரூபாய் நிதியும்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 31443  குடும்பங்களுக்கு 8.7மில்லியன் நிதியும், அம்பாறை மாவட்டத்திற்கு 7.4 மில்லியன் ரூபாய் பணம் 26877 குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை காச நோய், சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய், தொழுநோய் தலசீமியா நோய் போன்றவற்றிற்காக கிழக்கு மாகாணத்தில் 1. 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்  இதனூடாக திருகோணமலை மாவட்டத்தில் 222 குடும்பங்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 746 குடும்பங்களுக்கும் அம்பாறை மாவட்டத்தில்  1103 குடும்பங்களுக்கும் இந்நிதி பகிர்ந்தளிக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம். மதிவண்ணன் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  கிழக்கு மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட 14 முதியோர் இல்லங்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்காக அங்கு தங்கியிருக்கும் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் பொதி சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பாக கடந்த காலங்களில் தபால் கந்தோர் ஊடாக வழங்கப்பட்ட இந்த கொடுப்பனவு தொகை இம்முறை கொரோனா தொற்று காரணமாக தங்களது கிராம சேவையாளர்களிடம் பெற்றுக் கொள்ளுமாறும் மாகாண பணிப்பாளர்  பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(அப்துல்சலாம் யாசீம் - ரொட்டவெவ குறூப் நிருபர்)

Tue, 03/31/2020 - 08:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை