டெஸ்ட் தொடருக்காக இலங்கை வந்தடைந்த இங்கிலாந்து வீரர்கள்

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் நேற்றுமுன்தினம் இலங்கையை வந்தடைந்தனர்.

இங்கிலாந்து அணி அண்மையில் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டனர். ஒன்றிரண்டு வீரர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி காலியில் தொடங்குகிறது. அதற்கு முன் மார்ச் 7 ஆம் திகதியில் இருந்து 9 ஆம் திகதி வரையும், மார்ச் 12 ஆம் திகதியில் இருந்து 15 ஆம் திகதி வரையும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

இதற்காக இங்கிலாந்து அணி இலங்கை வந்துள்ளது. இந்நிலையில், இலங்கை புறப்பட முன்னர் அந்த அணியின் தலைவர் ஜோ ரூட்டிடம் கொரோனோ வைரஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அவர் இதற்கு பதிலளிக்கையில் ”தென்னாபிரிக்கா தொடரின்போது அணியின் ஏராளமான வீரர்கள் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பிறகு, அது குறித்து நாங்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளோம். கிருமிகள் மற்றும் பக்டீரியா பரவுவதை தடுக்க எங்களுடைய மருத்துவக்குழு குறிப்பிடத் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

நாங்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்க மாட்டோம். கைகளை கிரமமாக சுத்தம் செய்வோம். பக்டீரியா எதிர்ப்பு துடைப்பானை பயன்படுத்தி தரையை சுத்தம் செய்வோம்.

கொரோனா வைரஸால் இலங்கை தொடர் பாதிக்கப்படும் என்ற ஆலோசனை ஏதும் இல்லை. ஆனால், அவசரமான சூழ்நிலை ஏற்பட்டால் தொடர்ந்து எங்கள் அதிகாரிகளுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் இந்தத் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Thu, 03/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை