வினைத்திறனான ரயில் சேவையை ஏற்படுத்த ஜனாதிபதி பணிப்பு

ரயில் சேவையின் குறைபாடுகளை கண்டறிந்து அதனை வினைத்திறன், மக்கள் நேய சேவையாக மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

ரயில்சேவை காலதாமதங்களை இல்லாது செய்தல், ரயில் பெட்டிகளின் வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி இச்சேவையை முறைப்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ரயில்சேவையின் மேம்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்தார். நாளாந்தம் 3,85,000 பேர் ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

இவர்களுக்கும் அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்தும் மேலும் பலருக்கும் ரயில்சேவைகளை வழங்கி வீதி நெரிசலுக்குத் தீர்வை பெற்றுக் கொடுக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ரயில் பயணிகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நெரிசலுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த நிலைமையை ஒழிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. பிரச்சினைகளை தீர்க்கின்றபோதும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போதும் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு, முன்மொழிவு மற்றும் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.

மக்களின் தேவையின் அடிப்படையில் நாளாந்த நேரஅட்டவனை தயாரிக்கப்பட வேண்டும். புகையிரத திணைக்களத்தின் தற்போதைய தொழிற்படையின் இயலுமையை கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தி அதனூடாக பயனுறுதி வாய்ந்த சேவையை வழங்குவது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு ஜனாதிபதி கொண்டு வந்தார்.

காலங்கடந்த சமிக்ைஞ முறைமை ரயில் தாமதத்திற்கு காரணமாகும். உள்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் அதற்கு தேவையான தீர்வுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அலுவலக நேரமல்லாத நேரங்களில் பொருட்களை கொண்டு செல்லும் சேவைக்காக ரயிலை பயன்படுத்தக் கூடிய இயலுமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு ரயில்சேவையை கவர்ச்சிகரமான முறையில் நவீனமயப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனெவிரத்ன, ரயில்வே பொது முகாமையாளர் எம்.ஜே.டி.பெர்ணான்டோ ஆகியோரும் சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை