கொரோனா: தொழில்துறை பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வு

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் தொழில் துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றைத் தடுக்கும் வகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட குழு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் தொழில் துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அவற்றை பாதுகாப்பது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சரும், தொழில் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் நிறுவனங்களில் தலைவர்கள் பங்கேற்ற விசேட பேச்சுவார்த்தையொன்று தொழில் அமைச்சில் நேற்று நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையின்போது கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும் அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, நாட்டை கொரோனா வைரசிலிருந்து மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைள் தொடர்பில் மேற்படி நிறுவனங்களில் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது கொரோனா வைரஸ் காரணமாக எதிர்கொள்ளக்கூடிய சில நெருக்கடிகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டன. குறிப்பாக நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் வருமானம் வெகுவாக குறைதல், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு தொழில் பாதுகாப்பு, உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ளுதல் என்பன தொடர்பில் ஆராயப்பட்டன.

உற்பத்தித்துறைக்கான பெரும்பாலான மூலப் பொருட்கள் சீனாவிலிருந்தே கொள்வனவு செய்யப்படுவதால் சிக்கல்கள் மேலும் உக்கிரமடையலாம் என்பது தொடர்பிலும் கலந்துரையாப்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை