வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்

நெதர்லாந்து தூதுவரிடம் இரா. சம்பந்தன்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு, திறன் அபிவிருத்தி உள்ளடக்கிய பூரண அபிவிருத்தித் திட்டவரைபை முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் பங்களிப்புச் செய்ய வேண்டுமென

நெதர்லாந்து தூதுவரிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் நேற்றைய தினம் (03) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பதிலளித்த நெதர்லாந்து தூதுவர்: வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கு தமது பூரண ஓத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.

இச்சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன்:

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் சிங்கள மக்களின் இருப்புக்குப் பாதகம் ஏற்படப்போவதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.வெற்றியை இலக்கு வைத்த பிரச்சாரங்களே இவை.

மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கை அரசின் முடிவானது நாட்டிற்கு நன்மைபயக்காது. மனித உரிமைகள் தொடர்பில் தமிழ், சிங்கள பேதமோ பிரச்சினைகளோ இல்லை. எவரேனும் சர்வதேச மனித நேய சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறியிருப்பின் அத்தகைய நபர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும்.

மனித உரிமை பேரவையின் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானங்களில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் மூன்று முக்கிய விடயங்கள், உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நிலையான சமாதானத்தை அடைய இந்த மூன்று அம்சங்களையும் அடையவேண்டியது அவசியம். மேலும், உண்மை நிலைநாட்டப்பட்டு நீதியானது நியாயமான ஒரு நீதிப்பொறிமுறையூடாக இவற்றை அடைய வேண்டும்.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் சார்பில் யுத்தத்தை முன்னெடுத்த அரச படைகள், பொதுமக்கள் தொடர்பில் பொறுப்பும் கடப்பாடும் கொண்டவர்களாக இருத்தல் அவசியம்.

அப்படியாக நடந்துகொள்ளவேண்டியவர்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களுக்கு முரணாக செயற்பட்டிருந்தால் அத்தகையவர்கள் தங்களது நடவடிக்கைகளுக்கு பொறுப்புகூறுவதும் அவசியம். யுத்தகாலத்தின்போது அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் நோக்கில் அந்த வாக்குறுதிகள் மதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த விடயங்கள் குறித்து தீர்வு காணத் தவறின் நாட்டில் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு பிற்பாடு பல்வேறு வரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளதையும் அநேக விடயங்களில் பாரியளவு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Thu, 03/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை