யாழில் கொரோனாவின் பாதிப்பை உணரவில்லை; பரவினால் பாரதுரமானது

யாழ்.மாவட்டத்தில் மக்கள் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான பாதிப்பை உணர்ந்து கொள்ளவில்லை. அதுவே மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பாதகமாக அமையும் வாய்ப்புக்கள் உள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எமது மாவட்டத்தில் உள்ளவர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. 100 வீதம் வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு தாக்கினால் எதுவுமே செய்ய முடியாது. அந்த தாக்கம் மேலும் அதிகரித்தால் எதிர்கொள்ள மருத்துவ வசதிகள் கூட இல்லை எனவே வரும்முன் காப்பதே வழி என அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மருத்துவ அதிகாரிகள் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்,

மக்கள் தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடாதீர்கள் என அரசு தொடர்ந்து எச்சரிக்கிறது. அதற்கமைய இலங்கையில் பிற மாவட்டங்களில் மக்கள் நடமாட்டத்தை பெருமளவில் குறைத்துள்ளனர். ஆனால் யாழ்.மாவட்டத்தில் மக்கள் மிகச் சாதாரணமாக நடமாடி திரிகிறார்கள். அரசாங்க ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்ட விடுமுறையை சுற்றுலாக்களில் செலவிடலாம் என நினைக்கிறார்கள். பொது இடங்களில் குடும்பமாக கூடுகிறார்கள்.

யாழ்ப்பாண மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்பதுபோல் அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் அது ஆபத்தானது. பலாலி விமான நிலையம் ஊடாக மட்டும் 60ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் வந்துள்ளனர். கொழும்பு ஊடாக நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் வந்திருக்கின்றனர்.

அவர்கள் தற்போதுதான் கண்காணிக்கப்படுகின்றார்கள். அவர்கள் கொரோனா நோயாளிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் நோய் கடத்துபவர்களாக இருக்க மாட்டார்கள் என கூற முடியாது. மேலும் வெளிநாட்டவர்கள் பலர் தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்திற்கு நிகராக இலங்கையில் பரவி வருகின்றது. இலங்கையில் செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகள் 500 தான் உண்டு.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் 20 கட்டில்கள் மட்டுமே உள்ளன. தனியான அவசர சிகிச்சை பிரிவு கிடையாது. அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் கிடையாது.

பிரத்தியேகமாக இந்த சிகிச்சை நிலையத்துக்கு மருத்துவர்கள், தாதியர்கள், ஒதுக்கப்படவில்லை. இருக்கும் மருத்துவர்களும், தாதியர்களுமே பணியாற்ற வேண்டும். மருத்துவர், தாதியர்களுக்கு தற்காப்பு உடைகள், முகக்கவசங்கள், காலணிகள் போதுமான அளவில் இல்லை. தேசிய அளவில் அடிப்படை ஆரம்ப சிகிச்சைக்கான மருந்து கிடையாது.

ஒட்டுமொத்தமாக இலங்கை இன்றளவும் வளர்ந்துவரும் நாடு. சீனா அல்லது இத்தாலி போன்ற வளர்ச்சியடைந்த நாடு அல்ல.

பரப்பளவில் குறைந்த மிகச் சிறிய நாடு. எனவே வரும் முன்னர் முடியுமான வரையில் பாதுகாத்து கொள்வதே சிறந்தது. நோய் பரவல் தீவிரமானால் தற்போது இத்தாலி எடுத்துள்ளதைபோல் பலரை காப்பாற்ற முடியாமல்போகும் என்றனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை