- சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டதாக சந்தேகம்
- மூதூர், தோப்பூர், சம்பூர் மக்கள் அவதானம்!
யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படும் குடும்பமொன்று, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த போதகர் மீண்டும் சுவிஸ்லாந்து திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த குடும்பமொன்று நேற்றைய தினம் (28) இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆராதனையில் மேற்படி குடும்பத்தினர் கலந்துகொண்டுள்ளதாக மூதூர் சுகாதார பிரிவினருக்கும், மூதூர் பொலிஸாருக்கும் தகவல் கிடைத்ததையடுத்து, அக்குழுவினர் குறித்த வீட்டுக்குச் சென்று அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை 14 நாட்களுக்கு வெளியில் செல்லக்கூடாதெனவும், அவர்களுக்கு வீட்டுக்கு முன்னால் அபாய விளம்பரமொன்று இடப்பட்டுள்ளதாகவும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை. ஜெஸ்மி தெரிவித்தார்.
எனினும், குறித்த குடும்பமானது தாங்கள் குறித்த ஆராதனையில் கலந்துகொள்ளவில்லையென விசாரணையில் தெரிவித்ததாகவும் எனினும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவும், மூதூர் பொலிஸாரும் அக்குடும்பத்தை 14 நாள்களுக்கு கண்காணிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு மூதூர், தோப்பூர், சம்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவதானமாக இருக்குமாறும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி மேலும் தெரிவித்தார்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், தோப்பூர் குறூப் நிருபர் - என்.எம். நௌபீக்)
from tkn