இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு குவைத் விமானசேவை இடைநிறுத்தம்

ஸ்ரீ லங்கனின் சீனா, ஜித்தா சேவைகள் இடைநிறுத்தம்

குவைத் அரசாங்கம் இன்று (07) முதல் ஒருவார காலத்திற்கு இலங்கை உள்ளிட்ட 07நாடுகளுக்கான விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வருவதைக் கவனத்திற்கொண்டு குவைத் அரசாங்கத்தினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எகிப்து, பிலிப்பைன்ஸ், சிரியா, லெபனான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கே விமான சேவையை குவைத் அரசாங்கம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

அத்தோடு இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக  தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குவைத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நாடுகளிலிருந்து வரும் குவைத் நாட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு நாட்டில்  அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குவைத்தில் 58பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் சீனாவுக்கான விமானங்களையும், மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 வரையில் சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கான விமானங்களையும் இடைநிறுத்துவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sat, 03/07/2020 - 14:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை