கொரோனா வைரஸ் உயிரிழப்பு 4000ஐ தாண்டியது: முழு இத்தாலியும் முடக்கம்

சீனா, தென் கொரியாவில் தொடர்ந்து முன்னேற்றம்

கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவி வரும் நிலையில் இத்தாலி முழு நாட்டையும் முடக்கியிருப்பதோடு, உலகளாவிய ரீதியில் அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் கடந்த திங்கட்கிழமை மோசமான சரிவை சந்தித்த வர்த்தகம் நேற்று மீட்சி பெற்றது.

கொவிட்–19 என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தற்போது 100க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி இருப்பதோடு இதனால் உலகெங்கும் 4,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 113,000ஐ நெருங்கியுள்ளது.

எனினும் இந்த வைரஸ் தோன்றிய சீனாவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அங்கு தற்போது வைரஸ் தொற்று வீழ்ச்சி கண்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த வைரஸ் தீவிரமடைந்திருக்கும் நிலையில் சீனாவில் தற்போது ஸ்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை எடுத்துக் காட்டும் வகையில் கொரோனா வைரஸ் தொற்றின் மையப் புள்ளியாக இருக்கும் வூஹான் நகருக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பின் பயணம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்துள்ளார்.

சீனாவில் புதிதாக 19 பேருக்கே வைரஸ் தொற்றி இருப்பதோடு இதில் 17 பேர் வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மேலும் இரு சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து பரவியதாகும். இதன்மூலம் வூஹானை தலைநகராகக் கொண்ட ஹுபெய் மாகாணத்திற்கு வெளியில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக உள்நாட்டில் இருந்து வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை.

சீனாவில் மொத்தம் 80,754 நோயாளிகள் பதிவானதோடு இவர்களில் சுமார் 60,000 பேர் சுகம்பெற்று விடுகளுக்கு சென்றுள்ளனர்.

மற்றைய ஆசிய நாடான தென் கொரியாவிலும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. தேசிய அளவில் நோய் ஆய்வை மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக 190,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் நேற்று மிகக் குறைவான வைரஸ் தொற்று சம்பவங்களே பதிவாகியுள்ளன.

தென் கொரியா தனது வைரஸ் தொற்று உச்ச வரம்பை கடந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் பார்க் நியுகு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தென் கொரியாவில் நேற்று 35 புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவானதோடு அந்நாட்டில் மொத்தம் 7,513 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று மேலும் மூவர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 54 பேர் பலியாகி இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான கொரிய மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் வைரஸ் தற்போது தீவிரம் கண்டுள்ள மேற்குலகுக்கு ஆறுதலான ஒன்றாக உள்ளது.

கொரோனா வைரஸை ஒட்டி அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதோடு நோயாளி ஒருவருடன் தொடர்புபட்ட பாராளுமன்ற உறுப்பினர் தம்மை தாமே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஐரோப்பாவில் தீவிரம் அடைந்திருக்கும் இந்த வைரஸ் பிராந்தியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அண்டை நாடான ஜெர்மனியில் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேவேளை வரலாற்றிலேயே கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய தொற்று நோயாக மாறி அச்சுறுத்தல் விளைவித்து வருகிறது என்பது உண்மையே ஆனால், இது கட்டுப்படுத்தக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலி முடக்கம்

முன்னெப்போதும் இல்லாத மற்றும் சட்டரீதியான ஒரு நடவடிக்கையாக ஒட்டுமொத்த இத்தாலியும் அதன் 60 மில்லியன் மக்களும் முடக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் கியுசெப் கொண்டே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு பிராந்தியமான லொம்பாடி மற்றும் 14 மாகாணங்கள் ஏற்கனவே தனிமைப்பத்தப்பட்டுள்ளன. புதிய உத்தரவின்படி இந்தக் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இத்தாலி மற்றும் ஐரோப்பிய பெருநிலத்தில் தொடர்ந்து பரவி வருகிறது.

பயணக் கட்டுப்பாடுகள், பொது நிகழ்ச்சிகளுக்கான தடை, திரையரங்கு போன்ற பொது வெளிகள் மற்றும் பாடசாலைகளுக்கு பூட்டு மற்றும் இறுதிச் சடங்குகள் மற்றும் திருமணங்கள் உட்பட மத வழிபாடுகள் இடைநிறுத்தம் உட்பட பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மக்கள் நடமாட்டம் மீதான தடையை அமுல்படுத்தும் வகையில் இராணுவ பொலிஸ், ரயில்வே பொலிஸ் சுகாதார பணியாளர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் நிலையங்களில் சோதனைச்சாவடிகளை நிறுவியுள்ளனர்.

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கடுமையான நடவடிக்கையாக இவை உள்ளன.

இத்தாலியின் ஒரு பகுதி, குறிப்பாக வடக்குப் பிராந்தியத்தில் நிலைமை மோசமாக இருப்பதோடு அலையலையாக நோயாளிகள் குவிவதால் அங்கு சுகாதார கட்டமைப்பு சரிவை சந்தித்திருப்பதாக லொம்பார்டி நெருக்கடி பிரிவின் தீவிர பராமரிப்பு இணைப்பாளர் அன்டோனியோ பெசன்டி தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இதுவரை 9,172 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சீனாவுக்கு வெளியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது.

கட்டுப்படுத்த ஈரான் போராட்டம்

கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பதிப்புற்றிருக்கும் மற்றொரு நாடான ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி நடுப்பகுதியில் ஈரானில் தீவிரமடைந்த இந்த வைரஸினால் அந்நாட்டில் குறைந்தது 237 பேர் உயிரிழந்திருப்பதோடு 7,161 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையை விடவும் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

பாடசாலைகளை மூடி, பயணங்களை தவிர்க்கும்படி மக்களை அறிவுறுத்தி கொவிட்–19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஈரான் நிர்வாகம் முயன்று வருகிறது.

எனினும் சீனா மற்றும் இத்தாலி போன்று இந்த வைரஸ் தீவிரமடைந்திருக்கும் பகுதியை தனிமைப் படுத்தும் நடவடிக்கையை ஈரான் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுடன் தொடர்புபட்டு ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், ஈராக், குவைட், லெபனான், ஓமான், பாகிஸ்தான், கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் போன்ற நாடுகள் பல வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. நாட்டுக்குள் வரும்போது தமது சுகாதார நிலை மற்றும் பயண விபரங்களை வெளிப்படுத்தாதவர்களுக்கு 133,000 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அறிவித்துள்ளது.

அமெரிக்கா எங்கும் பரவல்

அமெரிக்காவில் குறைந்தது 20 மாநிலங்களில் புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் அமெரிக்காவெங்கும் இந்த வைரஸ் தொற்றியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது 36 மாநிலங்கள் மற்றும் தலைநகர் வொசிங்டன் டி.சியில் 717 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் வொசிங்டன் மாநிலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவில் பதிவான 26 உயிரிழப்புகளில் 22 இந்த மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு 180 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. வொஷிங்டன் உட்பட குறைந்தது 10 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது மாநில அரசு அவசர நிதி மற்றும் அதிகாரங்களை பெற உதவும். மறுபுறம் இந்த வைரஸ் தொற்று அமெரிக்க மத்திய அரசு மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளது.

வெள்ளை மாளிகை பணியாளர்கள் குழு தலைவரும் வடக்கு கரோலினா பிரதிநிதியுமான மார்க் மீடோஸ் தனிமைப்படுத்தப்பட்டு அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ள நபருடன் அவர் தொடர்பில் இருந்ததால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும், முன்னெச்சரிக்கையாக புதன்கிழமை வரை அவர் வீட்டில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்.

அண்டை நாடான கனடாவில் கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேல் நாட்டுக்குள் நுழையும் அனைவரும், 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

வர்த்தகங்கள் மீண்டன

கொரோனா வைரஸ் அச்சத்தினால் கடந்த திங்களன்று எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சி கண்டதோடு பங்குச் சந்தைகள் அதிர்ச்சிதரும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ரஷ்யா மற்றும் சவூதிக்கு இடையிலான விலைப் போட்டி காரணமாகவே எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டிருந்தது.

எனினும் நேற்றைய வர்த்தகத்தில் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஒரு சுமாரான மீட்சியை பதிவுசெய்துள்ளது.

மறுபுறம் மசகு எண்ணெய் விலையும் ஏறுமுகத்தைக் கண்டது. நேற்று பிற்பகல் அளவில் மசகு எண்ணெய் விலை 6.1 வீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 33 டொலராக இருந்த விலை நேற்று 36 டொலராக உயர்ந்தது.

கோவிட்–19 பீதி காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்க்கான தேவை குறைந்து வருவதால் மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என ஒபெக் அமைப்பில் உள்ள நாடுகள் சில கோரின. ஆனால் இந்த கோரிக்கைக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

இதனை அடுத்து சவூதி எண்ணெய் விலையை 30 வீதம் குறைத்ததை அடுத்தே சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை பெரும் சரிவை கண்டது.

எனினும் சவூதி அரேபியாவின் விலை குறைப்பு ஒரு குறுகியகால அதிர்ச்சி நடவடிக்கை மட்டுமே என்று எண்ணெய் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை