யாழில் 380 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மதபோதகர் நடமாடிய அரியாலை பகுதியில் 80 குடும்பங்களும், தாவடியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் வசித்த வீட்டினைச் சுற்றியுள்ள 300 குடும்பங்களும் இராணுவம் மற்றும் பொலிஸாருடைய பாதுகாப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் கொரொனா தொற்று தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் அவதானமாக இருக்கவேண்டும், அடுத்துவரும் இருவாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் தமது பிரதேச செயலகத்தினூடாக தமது அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கூடாக 64 ஆயிரம் குடும்பங்கள் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களுக்கான உலர் உணவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக1 மில்லியன் ரூபா நிதி மாவட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக பிரதமரால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பேக்கரி உற்பத்திகள் விநியோகம் காலையும் மாலையிலும் விநியோகிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் பதட்டம் இன்றி நோய்தொற்று தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ரூபன் - கொக்குவில் குறுப் நிருபர்

Mon, 03/23/2020 - 17:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை