29 ஆண்டுகளில் எண்ணெய் விலையில் பெரும் வீழ்ச்சி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மசகு எண்ணெய் விலை கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது.

மசகு எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் ஒபெக் ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்ததன் காரணமாக இந்த திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்ததோடு, உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை அற்ற சூழலைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் மசகு எண்ணெய் தேவையைக் காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. எனவே இதனைச் சரி செய்யும் விதமாக, சவூதி தலைமையிலான ஒபெக் நாடுகள் மசகு எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் உற்பத்தியைக் குறைப்பதில் சுமுகமான முடிவு எட்டப்படாத சூழலில், நேற்றுக் காலை மசகு எண்ணெய் விலையைக் குறைப்பதாக சவூதி அறிவித்துள்ளது.

சவூதிக்கு அடுத்து அதிகப்படியாக மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் ரஷ்யா ஒபெக் முடிவுக்கு ஒப்புக்கொள்ளாத சூழலில், ரஷ்யாவுக்கு பதிலடி தரும் வகையில் சவூதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதியின் இந்த விலை குறைப்பைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 31 டொலர் ஆகக் குறைந்துள்ளது. 1991க்கு பின்னர் கடந்த 29 ஆண்டுகளில் மசகு எண்ணெய் விலை இந்த அளவு சரிவைச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை