ஐந்தாம் கட்டமாக தனிமைப்படுத்தப்பட்ட குழுவினர் வீடு திரும்பினர்
வவுனியா பம்பைமடு, வெலிக்கந்த, புனானை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 309 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 167 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
கந்தக்காட்டில் 139 பேரும், தியத்தலாவையில் 03 பேரும் உள்ளிட்ட 309 பேர் இன்று (28) ஐந்தாம் கட்டமாக இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம்காணப்பட்டநிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்குட்டபடுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் கடந்த 13 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 167 பேர் இன்றயதினம் (28) விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்திருந்த நிலையில் அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.
வன்னிமாவட்ட கட்டளை தளபதிமேயர் ஜெனரல் ரோகித தர்மசிறி தலைமையில் அவர்கள் இன்றயதினம் வழிஅனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பயணிப்பதற்காக 11 பஸ்கள் இராணுவத்தால் ஒழுங்குசெய்யபட்டிருந்தன.
இலங்கையின் மொணராகலை, காலி, மாத்தறை, கண்டி, சிலாபம், நீர்கொழும்பு, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மையின மக்களும்
வடக்கின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 தமிழர்களும் இதன்போது விடுவிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த பயணிகளிற்கு கொரோனோ தொற்று பீடிக்கவில்லை என்று பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வதிவிடங்களுக்கு அனுப்பபட்டுள்ளதுடன், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியமைக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
(கனகராயன்குளம் நிருபர்)
from tkn