கொரோனா தொற்று 18 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதாரத் துறையும் அரசாங்கமும் வெளிப்படையாகவே செயற்பட்டு வருகின்றன. சமூகத்தினதும் நோயாளிகளதும் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுவதால் இதில் எந்த ஒளிவு மறைவுக்கும் இடமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதேவேளை, கொரோனா தொற்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்ைக 18ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களமும் இதனை நேற்றிரவு ஊர்ஜிதம் செய்தது.
அதேவேளை வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர் தொடர்பில் தவறாக நோக்குவது முறையற்றது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வெளிநாடுகளிலிருந்து வருவோர் தொடர்பில் கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என்றும் கடந்த 9ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் தொடர்பில் கண்காணிப்புகளும் மீளாய்வும் தொடர்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை தேடித்தருபவர்களான வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர் தொடர்பில் தவறாக நோக்குவது பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொடர்பில் இதுவரை 133 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் 9 பேர் வெளிநாட்டவராவர்.
நோய் இனங்காணப்பட்டுள்ள நிலையில் 18 பேர் ஐ.டி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருவதுடன் அவர்களில் இருவர் பெண்களாவர். 4405 நபர்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 120 பேர் சீனப் பிரஜைகளாவர். சீனாவில் மேற்படி நோய் பரவல் குறைவடைந்து வரும் நிலையில் ஏனைய நாடுகளில் சற்று அதிகரித்து வருகின்றன. தென்கொரியா இத்தாலி போன்ற நாடுகளில் தற்போது அதிகரித்த நிலை காணப்படுகின்றது. இலங்கையில் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (ஸ
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn