விமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்பு
பத்து நாட்களுக்குள் நிர்மாணிக்கப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் தொகுதியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கவிடம் இலங்கை விமானப்படை கையளித்துள்ளது.
இரட்டை கட்டடத் தொகுதியைக் கொண்ட இது 16 அறைகளைக் கொண்டதாக அமைந்துள்ளதோடு, இது முல்லேரியாவிலுள்ள,தேசிய தொற்று நோயியல் நிறுவன (IDH) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸின் நேரடி மேற்பார்வையின் கீழ், இலங்கை விமானப்படையினால் கடந்த மார்ச் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு, இன்று (28) அது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இரு வாரங்களுக்குள் இதனை நிர்மாணித்து நிறைவு செய்ய திட்டமிட்ட நிலையில், விமானப்படையின் சிவில் பொறியியல் பணிப்பாளர் பிரிவின் மூலம், சிரேஷ்ட சிவில் பொறியியல் அதிகாரி எயார் கமடோர் உதுல விஜேசிங்கவின் கீழ் அமைந்த, 9 சிவில் பொறியியலாளர்கள் மற்றும் 250 விமானப்படை வீரர்கள் அடங்கிய குழுவினால் இதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் கட்டுமானம் சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விமானப்படை ஊடகப் பிரிவு, அங்கு ஒவ்வொரு தனிமைப்படுத்தப்பட்ட அறையும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது ஐடிஹெச் இன் அவசரத் தேவையை பூர்த்தி செய்யவும் நாட்டில் COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க பெரிதும் உதவும் என நம்புவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
from tkn