தமிழ் பேசும் மக்கள் தமக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தமிழ் பேசும் மக்கள் தமக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் தெரிவித்தார்.

வவுனியா மதீனா நகர், அல்மதீனா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

பிள்ளைகளுக்கு சரியான பாதையில் பயணிக்க பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒழுக்கத்துடன் கற்கப்படுகின்ற கல்வி தான் அவர்களை நல்ல மனிதர்களாக, தலைவர்களாக, கல்விமான்களாக மாற்றுகின்றது. ஆகவே ஒழுக்க விடயத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். ஒற்றுமையாக வாழ்ந்து கொள்ளுங்கள்.

பேரினவாத சக்திகள் இந்த சிறுபான்மை சமூகத்தினுடைய உரிமைகளில் கைவைப்பதை நாங்கள் பார்க்கின்றோம். சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஆள எத்தனிக்கின்ற பல விடயங்களை நாங்கள் பார்க்கின்றோம். பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை தலைவர்கள் பற்றி இல்லாத, பொல்லாத அபாண்டங்களைச் சொல்லி பெரும்பான்மை மக்களிடத்தில் எதிரிகளாக சிறுபான்மை தலைமைகளை காட்டுகின்ற அசிங்கமான அரசியல் அண்மைக்காலமாக நமது நாட்டில் நடந்து வருகின்றது.

எதிர்காலத்தில் நாங்கள் மிக நிதானமாக சிந்தித்து ஒற்றுமையாக மக்களினுடைய நலனுக்காக, எமது பிரதேசத்தினுடைய நலனுக்காக, அபிவிருத்திக்காக, எமது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எமது இருப்புக்காக நாம் ஒற்றுமையாக வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.

இருவருக்கு இடையில் பிரச்சினைகள் வந்தால் அந்த இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க வேண்டுமே தவிர, இரண்டு பேரும் வேறு வேறு சமூகத்தை சார்ந்தவாராக இருந்தால் அதை சமூகப் பிரச்சினையாக அல்லது இனப் பிரச்சினையாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் அசிங்கமான வேலைகளை செய்யக் கூடாது.

எதிர்காலத்திலும் எங்களுடைய தேவைகளை அடைந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட சமூகமாக இருந்து கொள்ளுங்கள் என்றார்.

வவுனியா விசேட நிருபர்

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை