மேற்கு ஜெர்மனி நகரான ஹனாவுவில் இரு ஷிஷா விடுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை இரவு துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக நடத்திய இந்த தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்ற இரு பகுதிகளிலும் குர்திஷ் மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். இரண்டாவது நபர் ஒருவரின் சடலத்துடன் சந்தேக நபரின் உடல் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இது பற்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் ஒருவர் என்றும் அவரது காரில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் எழுதிய கடிதம் மற்றும் வீடியோ மூலம் தீவிர வலதுசாரி சிந்தனை கொண்டவர் என்று தெரியவருவதாக பில்ட் என்ற அந்தப் பத்திரிகை குறிப்பிட்டபோதும் அது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. மத்திய ஹாவு நகரில் இருக்கும் ஷிஷா விடுதியில் நள்ளிரவில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பல டஜன் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதாகவும் சாட்சியங்கள் குறிப்பிட்டுள்ளன.
தொடர்ந்து சந்தேக நபர் இருண்ட கார் ஒன்றில் தப்பிச் சென்றிருப்பதோடு பின்னர் அண்டைய பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றிலும் சூடு நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குழாய் மூலம் ஒருவகை புகைப்பிடிப்பதற்காகே மக்கள் ஷிஷா விடுதிகளில் ஒன்றுகூடுகின்றனர். சம்பிரதாயமாக மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாட்டு மக்களிடையே இது பிரபலமாக உள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ஏழு மணி நேரம் சந்தேக நபரைத் தேடி சல்லடையிட்டனர். ஆரம்பத்தில் ஒருவருக்கு மேற்பட்ட தாக்குதல்தாரிகள் இதில் தொடர்புட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
“பொலிஸ் சிறப்புப் படையினர் மூலம் வீடு ஒன்றில் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. மேலும் இரு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உயிரிழந்திருக்கும் ஒருவர் இந்தத் தாக்குதலுடன் தொடர்புட்டவர் என்று சந்தேகிக்கப்படுகிறது” என்று பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உலகில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜெர்மனி உள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை அடுத்து அந்த சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
from tkn