மூழ்கும் கப்பலே ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி எத்தகைய பெயர் மாற்றங்களை செய்து புதிய சின்னங்கள் மூலம் தேர்தலை சந்தித்தாலும் 50 பாராளுமன்ற உறுப்பினர்களைக்கூட பெறாது. ஐ.தே.க. மூழ்கப்போகும் கப்பலாகும். அதில் ஏறி பயணிக்க எவரும் தயாராக இல்லை என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சு.கவினரை தம்முடன் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஒரு கப்பல் மூழ்கப்போகுதென தெரிந்தால் அதிலிருக்கும் எலிகளும் வெளியில் பாய்ந்துவிடும். சஜித் கப்பல் முழ்கிவிட்டது. இறுதி நுனி மாத்திரமே தெரிகிறது. அதில் ஏறி பயணிக்க எவரும் தயாராக இல்லை.

முதல் ஐ.தே.கவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வுகாணுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அதன் பின்னர் ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுங்கள். நாட்டை நாசமாக்கிய யானை, புலிகள் மீண்டும் இணைய போகின்றனர். நாட்டை நாசமாக்கிய மற்றும் நாட்டை பிரிவினைவாதிகளுக்கு காட்சிக் கொடுத்தவர்களே இவ்வாறு இணைய போவதுடன், ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கவுள்ளனர்.

ஐ.தே.கவுக்குள் சின்னம் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஸ்திரமற்ற அல்லது ஒரு நிலையற்ற அரசியல் கட்சியானது தேர்தலில் எத்தகைய பெறுபேறுகளை பெருமென்பது தெளிவானது. ஆகவே, எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் 50 ஆசனங்களையும்விட குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களையே ஐ.தே.க பெறும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை