தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியோர் சிறந்த திட்டங்களை முன்னெடுக்கவில்லை

புதுக்குளம் மகா வித்தியாலய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ்

கடந்த காலங்களில் தேசிய பாடசாலைகளை ஊக்குவிக்கும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. மாகாண சபைக்கு கீழாகவே பாடசாலைகள் முன்னேற்றப்பட வேண்டும், வளர்த்தெடுக்க வேண்டும், தேசிய தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற கொள்கையோடு செயற்பட்டு வந்தேன். ஆனால் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியதாக சொல்லப்படும் கட்சிகள் அல்லது தலைவர்கள் அந்த கொள்கைகளை சரியாக முன்னெடுக்கவில்லை.

அந்த வகையில் பல இடங்களிற்கு சென்ற போதும் தங்களுடைய பாடசாலைகளை தரம் உயர்த்தி தேசிய பாடசாலைகளாக மாற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ அவர்களுடைய தேவைகளையும் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து அமைச்சரவையில் சிபார்சு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தேர்ச்சிக் கூடம் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டதுடன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியிலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

இதன் போது பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் அமைச்சரினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கும் அமைச்சர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தமை விசேட அம்சமாகும்.

பாடசாலையின் அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சருடன் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் பின்னர் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது ஏனைய கட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் உருவாகுவதற்கோ அச்சுறுத்தலாக அமையுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி க்கு பதிலளித்த அமைச்சர்,

ஜனநாயகத்தில் ஆயிரம் மலர்கள் மலரலாம் என்பதுதான் எங்களுடைய கொள்கை. கடந்த காலத்திலே பேச்சு சுதந்திரம் மற்றும் மாற்றுக்கருத்துக்கு இடமளிக்காத நிலைமையினால் எமது தமிழ் சமூகம் அழிய வேண்டிய, சீரழிய வேண்டிய நிலை ஏற்பட்டது. மாற்றான் வீட்டுத்தோட்டத்தில் மல்லிகையும் மணக்கும் என்பதுதான் எனது கருத்து எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர்

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை