தேவையான தகவல்கள் கிடைத்தும் கடந்த அரசாங்கம் மூடிமறைப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு எயார் பஸ் கொள்வனவு செய்வதற்காக பிரான்ஸ் நாட்டு நிறுவனமொன்றுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் போதிய தகவல்கள் கிடைத்த போதும் கடந்த அரசாங்கத்தில் இதற்கு எதிராக சட்ட நடடிக்கைகளை முன்னெடுக்காமல் அதனை மூடிமறைக்க பல அமைச்சர்கள் முற்பட்டனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டினார்.

எயார் பஸ் விமானக் கொள்வனவு உடன்படிக்கையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவுக்கும் இந்த ஊழல் - மோசடிகள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு சட்ட மாஅதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைப்பாடொன்றை பொலிஸாருக்கு அளித்துள்ளது.

பிரித்தானிய கிரவுன் நீதிமன்றத்தின் வெளிப்படையான தீர்ப்பின் பின்னர் இதுதொடர்பிலான ஆவணங்களை பிரித்தானியாவின் பாரிய ஊழல் - மோசடிகள் தொடர்பிலான அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கைகளின் பிரகாரம் பொறுப்புக்கூறும் தரப்பிடமிருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்பார்கிறது.

ஸ்ரீலங்கன் நிறுவனம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழுவுக்கு ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தகவல்களை வழங்கியுள்ளனர். இதுதொடர்பில் நீண்டகாலம் விசாரணைகள் நடைபெற்றுள்ளன. சட்ட மாஅதிபருக்கும் அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கும் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. விசாரணை அறிக்கைகளை அவர்கள் மூடிமறைக்க முற்பட்டுள்ளனர். என்றாலும் இந்த விடயம் தொடர்பிலான தகவல்கள் வெளியானதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சட்ட மாஅதிபருடன் கலந்துரையாடி உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் அரசாங்கம் எவ்வித அழுத்தங்களும் கொடுக்காது. தலையீடுகளையும் செய்யாது. சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரம் இதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கும் சூழலையும் பின்புலத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 02/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை