கிண்ணியாவில் மணல் மாபியாவுக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகமார் மற்றும் நடு ஊற்று ஆகிய பிரதேசங்களில் மணல் மாபியாவை கட்டுப்படுத்துமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று (7) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த போராட்டம் கச்சக்கொடித்தீவு - மகமார் பிரதான வீதியிலும் கிண்ணியா பிரதேச சபை முன்பாகவும் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,...

நடுஊற்று மற்றும் மகமார் ஆகிய இரு கிராமங்களிலும் சட்டத்துக்கு விரோதமான முறையில் தொடர்ச்சியாக மணல் அகழ்வும் கிரவல் அகழ்வும் இடம்பெற்று வருகின்றது.

இதில் ஈடுபடுகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கச்சக்கொடித்தீவு - மகமார் வீதியினூடாக தினமும் நேர வரையறை இன்றி செல்கின்றன.

இந்த வீதி கனரக வாகனங்கள் செல்லக் கூடிய அளவுக்கு சீர் இன்றி பள்ளமும் படுகுழியுமாக இருப்பதாலும், ஒடுங்கிய வீதியாக இருப்பதாலும் பாதசாரிகளும் சிறிய வாகனங்களில் செல்வோரும் மாணவர்களும் மரணப் பீதியிலே நாளாந்தம் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப் பிரதேச எல்லைக்குள் அந்நஜாத் மகா வித்தியாலயம் , அலிகார் மகா வித்தியாலயம் மற்றும் சக்கரிய்யா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளும் அமைந்துள்ளன.

எனவே நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ் வீதியில் பயணம் செய்கின்றனர். இவர்கள் தினந்தோறும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அத்தோடு பிரதேச வயல் நிலங்களும் குடியிருப்பு காணிகளும் அழிந்து போகும் அபாயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறன.

குறித்த விடயம் தொடர்பாக கிண்ணியா பிரதேச சபை தவிசாளர், கிண்ணியா பிரதேச செயலாளர் போன்றவர்களுக்கு சமூக சேவை அமைப்புகள், மத ஸ்தாபனங்கள் மூலம் உரிய முறையில் தெரியப்படுத்தியும் மணல் மாபியா தொடர்கிறது.

போராட்ட இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியேட்சர் தெரிவித்தாவது,..

மணல் மற்றும் கிரவல் அகழ்வுக்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என்றும் குடிபோதையில் வாகனம் செலுத்துவோர் கைது செய்யப்படுவர் என்றும் தெரிவித்தார்.எதிர்வரும் திங்கட்கிழமை அரசாங்க அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடனான விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிவித்தார்.இதனையடுத்து கவனயீர்ப்பு போரட்டம் கைவிடப்பட்டது.

கிண்ணியா மத்திய நிருபர்

Sat, 02/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை