தரகு பணம் கேட்டால் தக்க பாடம் புகட்டுங்கள்

வீட்டுத் திட்டத்துக்கு பயனாளிகள் பணம் வழங்கத் தேவையில்லை

மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனி வீட்டுத் திட்டத்துக்கு பயனாளிகள் பணம் வழங்க வேண்டியதில்லை. எனவே, யாராவது தரகு பணம் கேட்டுவந்தால் தக்க பாடம் புகட்டுங்கள் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஊடாக பதுளை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கான காணி உறுதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்வு நேற்று பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

பெருந்தோட்டப் பகுதிகளில் தரமாகவும், சிறப்பாகவும் தனிவீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த காலங்களைப்போல் அல்லாது, பணிகள் யாவும் மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெறும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே,செயற்கை வேலிகளை அமைத்து, மரங்கள், பூச் செடிகளை வைத்து பசுமையான சூழலை உருவாக்க வேண்டியது பயனாளிகளின் கடமையாகும். உட்கட்டமைப்பு வசதிகளும் எமது அமைச்சால் செய்துகொடுக்கப்படும்.

கடந்த காலங்களில் அமைச்சர் திறப்பு விழாவுக்கு வருகிறார், அவரின் அமைப்பாளர் கண்காணிக்க வருகிறார் போன்ற விடயங்களுக்காக தோட்ட மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படியான செயல்களுக்கும் நான் முற்றுபுள்ளி வைத்துள்ளேன்.

வீடமைப்பு திட்டம் துரிதகதியில் நடைபெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதன் காரணமாகவே இராணுவத்திலுள்ள சிவில் பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவிடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்க உத்தேசித்துள்ளோம். அவர்களிடம் வழங்கினால் விரைவாகவும், தரமானதாகவும் வீடுகள் கட்டப்படும். எவரும் தரகுப்பணமும் வசூலிக்கவும் முடியாது. கொடுக்கவும் முடியாது.

வீடமைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீதி, தண்ணீர், மைதானம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எனது அமைச்சில் பணம் உள்ளது.

எனவே, எவருக்கும் கமிசன் கொடுக்க வேண்டியதில்லை. யாராவது தரகு பணம் கேட்டு வந்தால் தக்க பாடம் புகட்டுங்கள் என்றார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Sat, 02/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை