பாராளுமன்றம் இன்று கூடுகிறது

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றும் நாளையும் இரு தினங்களிலும் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்திற்கான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்படவுள்ளது.

அதேவேளை, கோப் குழுவும் நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 367 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், கணக்கு வாக்கெடுப்புக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று ஆராயவுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவினால் இந்த யோசனை அனுமதிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அன்றையதினம் 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை விவாதம் நடத்தப்படும்.

இதனை விடவும் நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம், பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் என்பனவும் இன்றைய தினம் இக்குழுவில் ஆராய்ந்து அனுமதிக்கப்பட்டு 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

அதேவேளை, மத்திய வங்கியின் திறைசேரி பிணைமுறி விநியோகம் பற்றிய தடயவியல் கணக்காய்வு தொடர்பில் மத்திய வங்கி முன்வைத்திருக்கும் கண்காணிப்புக்கள் குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்படவுள்ளது.(ஸ)

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை