முன் வைத்த காலை பின் நகர்த்த மாட்டோம்

கனவுகளை தகர்த்து இலட்சியத்திலே இலக்கு

"இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எந்த சக்தியாலும் எச்சந்தர்ப்பத்திலும் அசைக்க முடியாது, முன்வைத்த கால்களை பின்வைக்காது இலட்சியம் இலக்குகளை வெல்வதற்கான பயணம் தொடரும் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

நானுஓயா சமர்செட் ஈஸ்டல் தோட்டத்தில் ஐம்பது வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபத்தில் கலந்து கொண்டு நேற்று (24) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, எம்மை பலவீனப்படுத்தலாம் எனச் சிலர் பகல் கனவு காண்கின்றனர். இவர்களின் கனவுகளைத் தகர்த்து முன்வைத்த காலை பின்வைக்காது எமது பயணம் தொடரும்."2002 இல் நுவரெலியாவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு ஒருவர் முயற்சித்தார்.

அங்கு இடம்பெற்ற சம்பவத்தின் அடிப்படையில் 2003 இல் எனக்கும், ஏனைய சிலருக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நபர் வழக்குத் தொடுத்திருந்தார்.

எனினும், 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.

எனவே, வாய்மையே வெல்லும் என்பதற்கு இதுவே சிறந்த அத்தாட்சி.அமரர் தொண்டமானின் காலத்தில் பொதுச் செயலாளராக இருந்தவர்,முதுகில் குத்திவிட்டு காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் ஏனைய ஐவர் சென்றனர். அண்மையில் கூட சிலர் கட்சி தாவினர். எனினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை இவர்களால் அசைக்க முடியாமல் போனது.

காங்கிரஸையோ அதன் சொத்துகளையோ அசைக்க முடியாது என்பது பலமுறை உறுதியாகியுள்ளது. அப்படி நடக்கும் எனக் கனவு காண்பவர்கள் தாராளமாகக் கனவு காணட்டும். நாம் எமது வேலைகளை செய்வோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை எடுத்துக் கொண்டால் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலேயே அன்னத்துக்கு அதிகம் வாக்குகள் விழுந்தன.

ஐந்தாண்டுகள் தொடர்ந்தும் ராஜபக்‌ஷக்களு டன் இருந்ததால் சிறுபான்மையினத்தவர் இருவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.

நாம் எதிரணியில் இருந்தபோதும் மலையக மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கினர். எனவே, முன்வைத்த காலை பின்வைக்காது சமூகத்துக்கான எமது சேவைகள் தொடரும்.

மலையகத்துக்கு தனிப்பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இடத்தை கண்காணிப்பதற்காக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் 29 ஆம் திகதி ஹற்றனுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Tue, 02/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை