சுதந்திர தினக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி: பொத்துவில் றபா அணி சம்பியன்

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேச சபை மற்றும் சுதந்திர தின விளையாட்டு குழு ஆகியன இணைந்து நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் றபா விளையாட்டுக் கழகம் அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவாகியது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேச சபை மற்றும் சுதந்திர தின விளையாட்டு குழு ஆகியன இணைந்து நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் அமைந்துள்ள பொது மைதானத்தில் இடம்பெற்றது. இதில் பொத்துவில் பிரதேசத்திலுள்ள 23 முன்னனி கழகங்கள் கலந்துகொண்டன.

இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் பொத்துவில் றாபா மற்றும் பொத்துவில் பவர் போய்ஸ் ஆகிய கழக அணிகள் மோதிக் கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய றபா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, தமக்கு வழங்கப்பட்ட 5 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டினை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அர்சாத் முஹம்மட் 20 பந்துகளில் 60 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

80ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பவர் போய்ஸ் அணி மட்டுப்படுத்தப்பட்ட 5 ஓவர்கள் நிறைவில் 37 ஓட்டங்களுக்கு சுருண்டது. இப்போட்டியில் றபா அணி 42 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது. இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக றபா அணி வீரர் அர்ஷாத் முஹம்மட் தெரிவானார். மற்றும் தொடர் ஆட்டநாயகனாக பவர் போய்ஸ் அணியின் ஹஸான் முஹம்மட் தெரிவானார்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் கலாநிதி எம்.எஸ். அப்துல் வாஸித் பிரதம அதிதியாகவும், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம்.மஜீட் மற்றும் எம்.எச்.எம்.கியாஸ் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.மலீக் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

- பாலமுனை விசேட நிருபர் -

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை