ஐ.தே.மு. எனும் கூட்டணியில் போட்டியிடமாட்டோம்

ஐ.தே.மு. எனும் கூட்டணியில் போட்டியிடமாட்டோம்-Will Not Contest Under UNF-UNF Party Leaders Decision-Mano Ganesan

ஐக்கிய தேசிய கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

இன்று (02) நண்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசிய கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டதாக, அதில் பங்குபற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி எனும் பெயரைத் தவிர்த்து புதிய பெயரில் கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதில் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த கூட்டணியின் பெயர், சின்னம், யாப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த கூட்டத்தில், பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

1. ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என்ற கூட்டணி கட்சிகளின் முடிவை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு ஏற்றுக்கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

2. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், ஒரு பரந்த கூட்டணியின் சார்பிலேயே நாம் அனைவரும் போட்டியிடுவோம். ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரை தவிர்த்து புதிய பெயரில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணியின் பெயர், சின்னம், யாப்பு ஆகியவை இன்னமும் சில தினங்களில் அறிவிக்கப்படும்.

3. கூட்டணியின் பொதுசெயலாளர் பதவிக்கு, ஐதேகவின் சிரேஷ்ட உறுப்பினர் ரஞ்சித் மத்தும்பண்டாரவின் பெயரை, இன்றைய கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் ஆராய்ந்து முடிவு செய்தனர்.

4. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைக்குழுவின் தலைவராகவும் சஜித் பிரேமதாச செயற்படுவார். இதில் பங்காளி கட்சிகளின் தலைவர்களும், ஐதேகவின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர்.

5. ஒவ்வொரு பங்காளி கட்சியும் கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும்.

6. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணியின் வேட்பாளர் நியமன சபையின் தலைவராகவும் சஜித் பிரேமதாச செயற்படுவார். இந்த சபையில் பங்காளி கட்சிகளின் தலைவர்களும், ஐதேகவின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர்.

7. இன்றைய ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் நியமனம் வழங்கப்படும். ஒவ்வொரு பங்காளி கட்சியும் 2015ம் வருட தேர்தலில் பெற்றுக்கொண்ட நியமனங்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும். மேலதிக வேட்பாளர் நியமனங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

8. ஐதேக மற்றும் பங்காளி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில், கூட்டணி உறுப்பினர்களாக செயற்படுவார்கள். ஒவ்வொரு கட்சியின் உறுப்பினரும் குறிப்பிட்ட கட்சிகளின் ஒழுங்கு கோவையின் கீழ் செயற்படுவார்கள். ஒரு கட்சியினால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு அங்கத்தவரை இன்னொரு பங்காளி கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் உள்வாங்க முடியாது.

Sun, 02/02/2020 - 19:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை