பொதுத் தேர்தலில் நுவரெலியா, வவுனியாவை கைப்பற்ற வியூகம்

அனுஷா தரப்புடன் கூட்டணி அமைக்கப் பேச்சு

"பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டங்களையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் வியூகம் வகுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பஸில் ராஜபக்ச என்னை நுவரெலியாவில் களமிறக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன், சந்திரசேகரனின் மகள் அனுசா சந்திரசேகரன் ஆகியோர் எமது அணியுடன் சங்கமிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர் அனைத்து தரப்புகளையும் இணைத்துக்கொண்டு - நாட்டை நேசிக்கும் கூட்டணியை அமைத்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

கொத்மலை, பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தலின் போது கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் பொதுத்தேர்தலில் எமது அணியால் 129 ஆசனங்களைக் கைப்பற்ற முடியும்.

தேசியப்பட்டியல் ஊடாகவே ஜே.வி.பிக்கு ஓர் ஆசனம் கிடைக்கும். மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, திகாம்பரத்தின் கட்சி, மனோ கணேசனின் கட்சி, ரிஷாத்தின் கட்சி, ஹக்கீமின் கட்சி ஆகியவற்றுக்கு 95 ஆசனங்களே கிடைக்கும்.

இந்நிலையில் நுவரெலியா, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் வெற்றிபெற்று ஆசன எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதற்காகவே பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் நுவரெலியாவுக்கு வந்துள்ளேன்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் களம் புகுந்துள்ளேன். செத்து மடியும் வரை இங்கேயே அரசியல் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, நுவரெலியா மாவட்ட மக்களை விட்டு விட்டு இனி எங்கும் செல்லமாட்டேன்.

அமைச்சர் தொண்டமான், சதாசிவம் ஆகியோர் எமது அணியில் உள்ளனர். மலையக மக்கள் முன்னணியை தற்போது வழி நடத்தும் இராதாகிருஷ்ணன், சந்திரசேகரனின் மகள் ஆகியோர் எம்முடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். எனவே, நுவரெலியாவில் வெற்றிநடை போட முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

நுவரெலியாவையும், வவுனியாவையும் கைப்பற்றினால் ஆசன எண்ணிக்கை 131 ஆக உயரும். அத்துடன், கம்பஹா, மாத்தறை, குருணாகல் போன்ற எமக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் மாவட்டங்களில் தலா ஒரு ஆசனம் வீதம் அதிகரித்துக்கொண்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற இலக்கை அடைந்து விடலாம்.

ஹக்கீம், ரிஷாட் அரசியல் முதலாளிகள் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது பாரதூரம் என்பதை உணர்ந்ததால்தான் தேசிய ஐக்கிய முன்னணியை அஷ்ரப் உருவாக்கினார். தமிழ், சிங்கள மக்களையும் கட்சிக்குள் உள்வாங்கினார். ஆனால், துர்திஷ்டவசமாக அவர் அகால மரணமடைந்து விட்டார்.

இன்று ரிஷாட் பதியுதீன், ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல் வியாபாரிகளே இருக்கின்றனர். அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர் என்றும் அவர் கூறினார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை