வீட்டுத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் அதிக கவனம் வேண்டும்

பிரதேச செயலாளர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

வடக்கில் வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது அதற்காக தெரிவு செய்யப்படுபவர்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும். உண்மையாக வீட்டுத் திட்டம் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்குவதை கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தினார்.

நேற்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாகவும் ஆளுநர் தகவல்களை கேட்டறிந்துகொண்டார். அத்துடன் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பான தகவல்களையும் அது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆராய்ந்தார். மேலும் வீடமைப்பு தொடர்பாகவும் தனித்தனியாக பிரதேச செயலாளர்களிடம் கேட்டறிந்தார்.

காணிகளை விடுவிக்குமாறு கூறப்படுகின்ற நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களால் துப்பரவாக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருப்பதற்கான காரணங்கள் தொடர்பாக ஆளுநர் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து ஆளுநர் கூறுகையில்,

காணிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் இவற்றை மையப்படுத்திய ஏனைய அபிவிருத்திகள் தடைப்படுகின்றன.

ஒரு மாத காலத்துக்குள் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளை மக்கள் பாவனைக்குட்படுத்த வேண்டும் என்பதை பிரதேச செயலாளர்கள் விடுவிக்கபட்ட காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வீட்டுத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுபவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உண்மையாக வீடு தேவைப்படுகின்ற குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டத்தின் பயன்பாட்டை கிடைக்க செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டில் வசிக்கும் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை பொறுப்பேற்று காணிகளை பயன்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும். அகதிகளாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தோர் யதார்த்தமாக இவ்விடயம் தொடர்பில் சிந்தித்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளை பொறுப்பேற்று பயன்பாட்டுக்கு உட்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் கிராம சேவகர்கள் தமது கடமைகளையும் சேவைகளையும் மக்களுக்கு சரிவர செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக கண்காணிக்கும்படி ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த அரச சேவை மக்களுக்கு சரிவர கிடைக்கிறது என்பது பற்றி உறுதிபடுத்த வேண்டியது அவசியம். அரச சேவை நன்மதிப்பிற்காக அரச அதிகாரிகள் உண்மையாகவும் வினைத்திறனுடனும் தொழிற்படுமாறும் ஒவ்வொருவரும் கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்து மக்களுக்காக உண்மையுடன் கடமையாற்ற வேண்டும் என்றார்.

நமது நிருபர்

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை