முல்லைத்தீவு, சிலாவத்தை வீட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மேற்கொண்ட சோதனையில் குறித் வீட்டிலிருந்து மேலும் சில வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்
சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் இருந்து வெடி பொருட்களை எடுத்து வந்து கழற்றி அதிலுள்ள வெடிமருந்துகளை விற்பனை செய்வதற்கு முற்பட்ட வேளையில் மோட்டார் வகையான ஒரு குண்டு வெடித்து சிதறியுள்ளது.
இதன்போது குறித்த குண்டை கழற்றி கொண்டிருந்த நபர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சூசைப்பிள்ளை புலேந்திரன் என்ற நபரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்
குறித்த நபர் சிலாவத்தை மாதிரி கிராமப்பகுதியில் வசிக்கின்ற தன்னுடைய தாயாருடைய வீட்டின் பின்புறத்தில் வைத்து குண்டை கழற்றி கொண்டிருந்த வேளையிலேயே குண்டு வெடித்து மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினர் அனைவரும் வருகை தந்து குறித்த இடத்தை சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த இடத்தில் மேலும் பல அபாயகரமான வெடிபொருட்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூட்டி இருந்த குறித்த வீடு பொலிசாரினால் சோதனையிடப்பட்ட நிலையில் அங்கு 3 மோட்டார் குண்டுகள் மற்றும் 4 கிலோ வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் தொடர்ச்சியாக இந்த வெடி பொருட்களிலிருந்து மருந்துகளை பிரித்தெடுத்து வியாபாரம் செய்த ஒருவராக இருந்திருக்க வேண்டும் எனவும் இவ்வாறான நிலையிலேயே குண்டு ஒன்றிலிருந்து மருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட நிலையிலேயே குண்டு வெடித்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து குறித்த வீட்டிலிருந்த காயமடைந்த நபரின் தாயாரான குறித்த வீட்டின் உரிமையாளர் மற்றும் காயமடைந்த நபருடைய சகோதரன் ஆகிய 69, 39 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தடயவியல் பொலிசார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரால் அவர்களுடைய வீடுகள் சோதனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
(மாங்குளம் குறூப் நிருபர் - எஸ். தவசீலன்)
from tkn