மட்டு. மாவட்டத்தில் அரசியல் ரீதியான அச்சுறுத்தல் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் அரசியல் ரீதியான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் உடனடியாக இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறான அச்சுறுத்தல் இருந்தால் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் முறைப்பாடுகளை செய்யுமாறும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அமீர் அலி எம்.பியிடம் வலியுறுத்தினார்.

“அனைத்து மக்களும் சமமாகவே நடத்தப்படுவார்களென ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், கல்குடா தொகுதியில் சிலர் பொது மக்களை அரசியல் ரீதியாக அச்சுத்துகின்றனர். குறிப்பாக தாமரை மொட்டுச் சின்னத்துக்கே எதிர்காலத்தில் வாக்களிக்க வேண்டுமென அச்சுறுத்துகின்றனர்.

ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இலக்க தகடுகள் இல்லாத சில மோட்டார் சைக்கில்கள் அங்குள்ளன. அதிகமாக பேசினால் கடத்தப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்துகின்றனர்.

ஜனாதிபதி அவ்வாறான கொள்கையுடையவர் அல்ல என எமக்குத் தெரியும். ஆகவே, பாதுகாப்பு அமைச்சு இந்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று அமீர் அலி எம்.பி. கூறினார்.

இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளா என வினவியதுடன், உயிர்த்த ஞாயிறுதினத் தத்தாக்குதல்கள் தொடர்பில் எமது சமூகத்தில் இன்னமும் கசப்பான அனுபவமொன்று காணப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் மோசமானவையாகும். உடனடியாக இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகளை செய்யுமாறும் அதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க தயார் என்றும் கூறினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை