9 வயது மகனுக்கு ‘அயர்ன் பொக்ஸ்’ சூடு வைத்த தாய்

3 நாட்களாக சிகிச்சையின்றியிருந்த சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தனது ஒன்பது வயது மகனுக்கு சூடாக்கிய மின் அழுத்தியால் (அயர்ன் பொக்ஸ்) உடல் முழுவதும் சூட்டுக்காயங்களை ஏற்படுத்திய தாயொருவர் தொடர்பில் காத்தான்குடியில் பதிவாகியுள்ளது. காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர்வீதியில் வசித்து வரும் சிறுவனொருவன் தாய் சூடு வைத்த காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை  காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

4ஆம் ஆண்டில் பாடசாலையில் கல்வி கற்கும் 9 வயதுடைய சிறுவன் கல்விகற்கும் பாடசாலைக்கு நேற்று (25) செவ்வாய்க்கிழமை காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பாடசாலையின் அதிபரை சந்தித்து இப்பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவனுக்கு சிறுவனின் தாய் மின்னழுத்தியினால் (அயர்ன் பொக்ஸ்) சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்ட போது முதலில் மறுத்த தாய் பின்னர் மகனை காண்பித்துள்ளார்.

பலத்த காயங்களுடன் காணப்பட்ட சிறுவனை அழைத்துக் கொண்டு அதிபரும் ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு சென்று சிறுவனை அனுமதித்துள்ளனர்.

ஆரம்பகட்ட சிகிச்சை மற்றும் விசாரணைகளையடுத்து சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை சிறுவன் குர்ஆன் மத்ரசாவுக்கு செல்லாமல் நித்திரையில் இருந்துள்ளான். இதன் போது சிறுவனின் தாய் சிறுவனை மதராசாவுக்கு செல்லுமாறு வற்புறுத்த சிறுவன் அங்கு காணப்பட்ட அயன் பொக்சை எடுத்து தூக்கி எறிந்துள்ளான்.

இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் அயர்ன் பொக்சை சூடாக்கி சிறுவனின் உடம்பின் பல இடங்களில் சூடு வைத்துள்ளார். இதனால் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் காணப்படுகின்றான்.

கடந்த மூன்று தினங்களாக எந்தவொரு சிகிச்சையும் சிறுவனுக்கு செய்யாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாகவும் தெரிய வருகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை