யாழ்ப்பாணம்-−கண்டி, எ-9 வீதியிலுள்ள நாவுலவில் இரண்டு தனியார் பஸ்கள் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்துச் சம்பவத்தில் 11 வயது சிறுவனும் ஒரு பெண்ணும் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவுலவிலுள்ள நாலந்த சுதர்ஷி வித்தியாலயத்துக்கருகே நேற்றுக் காலை 7 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. தம்புளையிலிருந்து சிவனொளிபாத மலை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸூமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்து இடம்பெற்ற மறுகணமே பாரிய கொள்கலன் ஒன்றும் தம்புள்ளையிலிருந்து வந்த பஸ்ஸின் பின்புறமாக மோதியுள்ளது. நேற்றைய தினம் பாடசாலை விடுமுறை ஆகையால் பாரிய உயிரிழப்புக்களை தடுக்க முடிந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினார்கள்.
பஸ்கள் மோதிக் கொண்ட சத்தத்தைக் கேட்டு அங்கே ஓடி வந்த ஊர் மக்கள் பாதுகாப்பாக பஸ்ஸூக்குள்ளிருந்தவர்களை மீட்டுள்ளனர்.
விபத்தில் மிகவும் கவலைக்கிடமாக இருந்த 11 வயது சிறுவன் நாளந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்தவர்கள் மாத்தளை மற்றும் தம்புளை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாவுல குறூப் நிருபர்
from tkn