உள்ளூராட்சி எல்லைகளை இன, மத அடையாளங்களால் வரையறுக்க முடியாது
கல்முனைப் பிராந்தியத்தில் நான்கு உள்ளூராட்சி சபைகளை உருவாக்கிய பின்னரே வெற்றி விழாவைக் கொண்டாடவுள்ளதாகவும் அடுத்த தேர்தலுக்குள் கரைவாகுப்பற்று வடக்கு,கரைவாகுப்பற்று தெற்கிற்கான உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டு சகல சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
அட்டாளைச்சேனையில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கைகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதானிகள், தேசிய காங்கிரஸில் இணைந்தமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா:
உள்ளூராட்சி சபைகள் என்பது தங்களைத் தாங்களே ஆள்வதற்கான பிரதேச அடையாளங்களாகும். இவ்வடையாளங்கள் இன,மதங்களுக்கு அப்பாலானவை.
தமிழர்களின் வீட்டுக்கூரைகள்,முஸ்லிம்களின் காணிகள், சிங்கள வர்களின் நிலபுலங்களை அடையாளமாக வைத்து இச்சபைகளுக்கு எல்லைகள் போட முனையக்கூடாது.இன, மத ரீதியாக மக்களைப் பிரித்து அதிகாரங்களை வழங்கும் எண்ணம் எம்மிடமில்லை. ஒரு காலத்தில் கரைவாகுப்பற்று தெற்கு, கரைவாகுப்பற்று மேற்கு, கரைவாகுப்பற்று வடக்கு, கல்முனை என நான்கு உள்ளூராட்சி சபைகள் அப்பிரதேசத்தில் இருந்தன. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவே இவற்றை ஒன்றாக்கினார். ஏற்கனவே இருந்த அதிகார அடையாளங்களையே இம்மக்கள் கோருகின்றனர். இந்த வகையில் சாய்ந்தமருது மக்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கரைவாகுப்பற்று வடக்கிற்கும் கரைவாகுப் பற்று மேற்கிற்கும் (மருதமுனை) விரைவில் உள்ளூராட்சி சபை வழங்கப்படும். ஒரு காலத்தில் ஒலுவில் முதல் திருக்கோயில் வரை எல்லைகளைாக இருந்த அக்கரைப்பற்று, இன்று அட்டாளைச்சேனை, திருக்கோயில், ஆலையடிவேம்பு எனப் பல சபைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்கியதை ஈழம் கொடுத்தது போன்று சில ஊடகங்கள் விமர்சிக்கின்றன. சஹ்ரானுக்கு கிடைத்த பரிசாகவும் இதைச் சிலர் சித்தரிக்கின்றனர். குரோத எண்ணங்கள், குதர்க்கங்களுடன் சில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் செயற்படுவதை நிறுத்த வேண்டும்.
சாய்ந்த மருதுக்கு தனியான சபையை வழங்கி, அஷ்ரஃபின் மண்ணைப் பிளக்கப்போவதாகவும் என்னைச் சிலர் விமர்சித்தனர்.சத்தியத்தை வெல்வதற்கான எமது சாத்வீகப் போராட்டத்தில் எந்த இனத்தவருக்கும் அநீதி இழைக்கப்படாது. முஸ்லிம்களை அரசியலில் விழிப்பூட்டுவதற்கே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எமது தலைவர் அஷ்ரஃப் ஆரம்பித்தார்.
இந்த விழிப்பினூடாக தேசிய ஐக்கியம் சகவாழ்வு, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு பின்னர் தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கிய அவர், பிற சமூகங்களிடமிருந்து முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்படாத அரசியலைச் செய்யவே விரும்பினார். இந்தப் பணியையே எமது தேசிய காங்கிரஸ் தலைமை செய்து வருகிறது. இன்று பெரும்பான்மைச் சிங்களச் சமூகம் விரும்பும் தலைமையாக எமது கட்சியுள்ளது. கிழக்கைப் பிரித்ததால் சந்தேகத்துடன் நோக்கிய சில தமிழர்களும் இன்று எம்மைப் புரிந்துள்ளனர்.
எமது நேர்மையில் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தேசிய கீதம் பற்றி பெரிதாக விமர்சிக்கும் சில தலைவர்கள், வெளிநாடுகளில் தேசிய கீதங்கள் பாடப்படுவதைப் பார்ப்பதில்லையா? தேசிய கீதத்தில் உள்ள சொற்களில் தமிழ் மொழிபேசுவோரின் வீதாசாரத்துக்கேற்ப சொற்களை இணைத்து பாட முடியும்.
இதில் அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை. எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய உணர்வை வெளிப்படுத்தியும் சமூகப்பலத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படும் என்றார்.
ராஜகிரிய குறூப் நிருபர்
from tkn