ஐ.சி.சி. பெண்கள் உலகக் கிண்ண டி20: பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி

ஐ.சி.சி. பெண்கள் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடருக்கான முதலாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை பெண்கள் அணி தென்னாபிரிக்காவிடம் 41 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

பெண்கள் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டி வரும் பெப்ரவரி 21 தொடக்கம் மார்ச் 8 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இதற்கு நேரடித் தகுதி பெற்ற இலங்கை பெண்கள் அணி நேற்று அடிலெயிட், கரென் ரோல்டன் மைதானத்தில் தென்னாபிரிக்க பெண்கள் அணியை பயிற்சிப் போட்டியில் எதிர்கொண்டது.

11 வீராங்கனைகள் களத்தடுப்பு, துடுப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும் 15 வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற விதியுடன் இடம்பெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் இலங்கை பெண்கள் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் போதிய திறமையை வெளிப்படுத்த தவறினர்.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க பெண்கள் அணியின் ஆரம்ப வீராங்கனைகள் இருவரையும் டக் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய இலங்கையின் அனுபவ மிதவேகப்பந்து வீச்சாளர் உமேசா பிரபோதினியால் முடிந்தது.

எனினும் தென்னாபிரிக்க அணியின் மத்திய வரிசை வீராங்கனைகள் சிறப்பாக செயற்பட்டனர். மெரிசான் கேப் 44 பந்துகளில் 44 ஓட்டங்களையும், லோரா வொல்வார் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களையும் பெற தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை குவித்தது.

பிரபோதினி தனது 4 ஓவர்களுக்கும் 8 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சமரி அத்தபத்துவும் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை பெண்கள் அணியின் எந்த வீராங்கனையும் நின்று பிடித்து ஆடவில்லை. ஒரு ஓட்டத்தை பெறுவதற்குள் முதல் விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை அணி 10 ஓட்ட இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் தேவையான ஓட்ட வேகத்தை எட்ட முடியாமல்போனது.

இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களையே பெற்றது. அமா கான்சனா பின்வரிசையில் 15 பந்துகளில் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களை பெற்றதே அதிகமாகும்.

தென்னாபிரிக்க அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய சுனே லுவுஸ் 4 ஓவர்களுக்கும் 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

டி20 உலகக் கிண்ணத்தில் ஏ குழுவில் ஆடும் இலங்கை பெண்கள் அணி தனது முதல் போட்டியில் வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி பேர்த் வகா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை