20ஆவது டிஎஸ்ஐ சுப்பர் ஸ்போட் பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி தொடர்பாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் முதல்தர பாதணிகள் உற்பத்தி நிறுவனம், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சின் பாடசாலை கரப்பந்தாட்ட சங்கம் என்பனவற்றின் உதவியோடு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு முன்வந்துள்ளதோடு, இது இலங்கையின் கரப்பந்தாட்ட வரலாற்றில் முக்கியமான இடத்தை வகிக்கும் ஒரு நிகழ்வாகும். 1999 ஆம் ஆண்டில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சு என்பனவற்றுடன் இணைந்து கிராமிய மற்றும் நகர்ப்புறங்கள் என்ற இரண்டு மட்டங்களிலுமான கரப்பந்தாட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களின் திறமைகளைக் கட்டியெழுப்பிக் கொள்ளவும், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் களம் ஒன்றை அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் இது ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இன் ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 40 விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்கு இது காரணமாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் மொத்தமாக 198 அணிகள் இந்த சம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டன. இவ்வருடம் நாடு தழுவிய ரீதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட அணிகள் இதில் கலந்து கொள்ளும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
போட்டிகள் மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் இடம்பெற இருக்கின்றன. மாவட்ட அடிப்படையிலான போட்டிகள் இம்மாதம் 20 முதல் மார்ச் 31 வரையும், தேசிய மட்டத்திலான போட்டிகள் ஏப்ரல் 27 முதல் மே 07 ஆம் திகதி வரையும் இடம்பெறும். இறுதிப் போட்டிகள் மே மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம்பெறும். வயது எல்லைகள் பின்வருமாறு - 11 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண் / பெண்கள், 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண் / பெண், 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண் / பெண், 17 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண் / பெண் மற்றும் 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண் / பெண் என்பனவாகும். 11 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண் / பெண் என்ற வயதுக் குழுவானது, கடந்த வருடம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலைகளிலும் நாடு தழுவிய ரீதியிலுமுள்ள டிஎஸ்ஐ காட்சியறைகளிலும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அருகிலுள்ள டிஎஸ்ஐ காட்சியறைகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை சந்தைப்படுத்தல் திணைக்களம், இல. 257, ஹைலெவல் வீதி, நாவின்ன, மஹரகம என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க முடியும். விண்ணப்பங்கள் யாவும் இம்மாதம் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
from tkn