நாவலப்பிட்டியில் திடீர் சுற்றிவளைப்பு; போதைப்பொருள் விற்ற 12 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் 12 பேர் நாவலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று (20) இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பகுதியில் மாத்திரம் 500 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும் இதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

அதற்கமைய இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, 150 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகின்றது.

நேற்று காலை 7 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை கம்பளை பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான 8 மோப்ப நாய்களின் உதவியோடு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, கேரள கஞ்சா, ஹெரோயின், மாவா, கசிப்பு போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களும் நாவலப்பிட்டி பகுதியை சேர்நதவர்கள் எனவும் இவர்களை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை