இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சுற்றுலா விமான சேவைகள் அமைச்சர் பிரசன்னா ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இடையேயான சந்திப்பில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட, இலங்கை மற்றும் மாலத்தீவு தூதுக்குழுவின் பிரதித் தலைவரும் அரசியல், வர்த்தக மற்றும் தகவல் தொடர்பாடல் தலைவருமான தோர்ஸ்டன் பார்க்பிரெட் (Thorsten Bargfrede) உறுதிப்படுத்தியுள்ளதோடு, அது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.பி வரிச் சலுகையானது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வரிச் சலுகையாகும். இது, குறித்த சலுகையைப் பெறும் நாடுகளுக்கான ஓர் ஊக்குவிப்பாக அமைகின்றது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, அதிக தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மூலம் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே குறித்த சலுகையின் நோக்கமாகும்.
from tkn