இந்த ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும்

ஒவ்வொரு வருடமும் உதயமாகும் தைப்பொங்கல் திருநாள் இம்முறை மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு.

மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும், ஏற்றத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது தம்பணியைத் தொடரும் என்பதையும் இத்தைப்பொங்கல் பெருநாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என இ.தொ.கா தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது பொங்கல் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:- தைப்பொங்கல் பெருநாள் தமிழர்கள் வாழும் இடங்கள் தோறும்கொண்டாடப்படுகிறது. இதற்கமைய, மலையகமெங்கும் இத்தைப்பொங்கல் மங்களகரமாக திகழ வேண்டும். மலையகத்திலும் இந்நாட்டின் இதர பகுதிகளிலும் வசித்துவரும் இந்திய வம்சாவளி மக்கள் தென்னகப் பண்பாடு, கலாசார விழுமியங்கள் ஆகியவற்றுக்கமைய இந்தப் பொங்கல் பெருநாளை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

எமது கட்டுக்கோப்பை மேலும் பலப்படுத்தி இதன் வாயிலாக எமக்குரிய உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு இந்நந்நாளில் நாம் திடசங்கற்பம் எடுத்துக் கொள்வோம்.

இந்த ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும். இப்பொங்கல் தினமானது மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும்.

 

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை