'ஓடக்கரை' இணைப்பு சஞ்சிகை வெளியீடு

மீன்பிடித் தொழிலாளர்களின் வழிகாட்டியாக 'ஓடக்கரை' சஞ்சிகை திகழவேண்டும்

மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையிலும் சிறந்த வழிகாட்டியாகவும் ‘ஓடக்கரை’ மாதாந்த சஞ்சிகை விளங்க வேண்டும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.

மீன்பிடித் தொழிலாளர்கள் தொடர்பான செய்திகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் அனுசரணையுடன் அரசாங்க பத்திரிகை நிறுவனமான லேக் ஹவுசினால் வெளியிடப்படவுள்ள ‘ஓடக்கரை’ எனும் மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று லேக் ஹவுஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதல் பிரதியை வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதன் மூலம் அவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி அவற்றை தீர்த்து வைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, நவீன தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை எமது மீன்பிடித் தொழிலாளர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் 'ஓடக்கரை' சஞ்சிகையின் வெளியீடு அமைய வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாரிய நம்பிக்கையுடன் தன்னிடம் வழங்கியிருக்கின்ற கடற்றொழில் அமைச்சினூடாக மீன்பிடித் தொழிலாளர்களினதும் அவர்கள் சார்ந்த மக்களினதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல், மீன்பித் தொழிலாளர்களுக்கு விசாலமான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தல், வளர்ச்சியடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற மீன்பிடி முறைகளை ஒத்த நவீன முறைகளை நமது மீனவர்களுக்கும் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த முயற்சி வெற்றியடைய ஓடக்கரை என்ற சஞ்சிகையின் ஒத்துழைப்பும் அவசியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை